ஜெ: ஆர்.கே.நகர் வரிசை எண் 11, விடுதலையானது 11, வேட்புமனு தாக்கல் செய்தது 11வதாக..
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் உட்பட மொத்தம் 53 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்கள் இன்று (ஜூன் 11) பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 13 ம் தேதி கடைசி நாளாகும்.
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மே 11ம் தேதி விடுதலை செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து முதல்வராக ஜெ., மீண்டும் பொறுப்பேற்றார். அவர் எம்.எல்.ஏ., ஆவதற்காக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவேல் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அந்த தொகுதிக்கு ஜூன் 27ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன.
ஜெயலலிதா
அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இடதுசாரிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த மகேந்திரன் போட்டியிடுகிறார்.
எதிர்கட்சிகள் புறக்கணிப்பு
முக்கிய கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாஜக கூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
டிராபிக் ராமசாமி
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல்
ஆர்.கே.நகருக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3ஆம் தேதி துவங்கியது. டிராஃபிக் ராமசாமி, பத்மராஜன், அகமது ஷாஜஹான், ரவி பறையனார், ஆபிரகாம் ராஜ் மோகன் என 5 பேர் மட்டுமே முதல்நாள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஜெ. ராசி நம்பர்
ஜெயலலிதாவிற்கு 5, 11 தான் தற்போதைய ராசி நம்பர் என்பதால் 5ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். காலையில் ராமதாஸ், மனோகரன், வெங்கடேஷ், வசந்தகுமார் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு கடைசியாக குமாரசாமி செய்தார். அவருக்கு அடுத்து 11வது ஆளாக ஜெயலலிதா மனுதாக்கல் செய்தார்.
குமாரசாமிக்கு பின் ஜெ
மோகன்ராஜ், அப்துல் வாகீத், மாரிமுத்து ஆகிய சுயேட்சை வேட்பாளர்கள் வந்திருந்த போதும் அவர்களை மனுத்தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு தடுத்து விட்டார்களாம். ஏனெனில் குமாரசாமிக்குப் பின்னர் 11வது ஆளாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
11 செண்டிமெண்ட்
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமியால் விடுதலை செய்யப்பட்ட மே 11 ஜெயலலிதாவின் சென்டிமென்ட் தேதியாகிவிட்டதால் எதற்கெடுத்தாலும் 11 என்ற எண் வருமாறு பார்த்துக்கொள்கின்றனர் அதிமுகவினர். தண்டையார்பேட்டை அலுவலகத்தின் முகவரி எண் 821. இதன் கூட்டுத் தொகையும் 11. ஆர்.கே.நகர் தொகுதியின் வரிசை எண் 11 என்பதால்தான் அந்தத் தொகுதியைத் தேர்வு செய்தார் ஜெயலலிதா.
53 பேர் மனுதாக்கல்
வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்துவிட்டது. இதுவரை மொத்தம் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் வேட்புமனுக்கள் ஜூன் 11 பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 13 ம் தேதி கடைசி நாளாகும்.
தீவிர ஓட்டு வேட்டை
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர். தேர்தல் பணிக்காக அதிமுக சார்பில் 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30ல் வாக்குப்பதிவு
ஜூன் 27 ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 30 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.