தூத்துக்குடியில் பயங்கரம்.. சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் கோவிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் பலியானார்கள்.
மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள சொக்கிபட்டி பகுதியை சார்ந்தவர் சேதுராமன். இவரதுமகன் முருகானந்தம் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். கடந்தவாரம் ஊருக்கு வந்தார் இவர்.
இவரது தங்கை மீனாவுக்கு திருமணமாகி பல ஆண்டுகாலமாக குழந்தையில்லை. இதற்காக குழந்தை வரம் வேண்டி குடும்பத்தினரோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவுசெய்து நேற்று இரவு அவர்கள் இன்னோவா காரில் மதுரையிலிருந்து புறப்பட்டனர். காரை முருகானந்தம் ஒட்டினர்.
காரில் 6 பெண்கள், 4 ஆண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 14 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் அவர்கள் தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ரவுண்டானாவை, காரை ஓட்டிய முருகானந்தம் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 20 அடி தூரத்தில் ரவுண்டானா கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக காரின் பிரேக்கை மிதித்துள்ளார்.
இதில், கார் அவரின் கட்டுப்பாட்டை மீறி ரவுண்டானா மீது பலமாக மோதியது. இதில் முருகானந்தம், அவரது அம்மா வசந்தா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காருக்குள் காயம்பட்டு போராடியவர்களை பெரும் சிரமத்தோடு மீட்டனர். உடனடியாக அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகானந்தத்தின் மனைவி ஆனந்தி, சகோதரி மகள் சிவசங்கரி ஆகியோர் பலியானார்கள். மற்றவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி என்பவரும் பலியானார்.
குழந்தைவரம் வேண்டி கோவிலுக்கு வந்த குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது ரவுண்டானா பகுதியில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததுதான் காரணம் என்கின்றனர்.