சேலம்: கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி- 2 பேர் கவலைக்கிடம்
சேலம்: அருகே கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் இரண்டு பேரின் நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி மேட்டுக்காடு தெலுங்கான் காடு பகுதியை சேர்ந்தவர் கெடாக்காரர் என்கிற தங்கவேல் (53). இவர் அதே பகுதியில் 2 மாடி கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கீழ்தளத்தில் 5 குடும்பங்களும், மேல் தளத்தில் 4 குடும்பங்களும் வசித்து வந்தனர்.
மேல்தளத்தில் அகமது மற்றும் தேவராஜன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அகமதுக்கு ஆயிஷா(38) என்ற மனைவியும், சித்திக்(17), ஆசிப்(14) என்ற 2 மகன்களும், சாயிதா(13) என்ற மகளும் உள்ளனர். இதில் சித்திக் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மற்றவர்கள் முறையே 9, 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இதேபோல், தேவராஜனுக்கு மல்லிகா(40) என்ற மனைவியும் சந்தியா(25) என்ற மகளும், குமார்(24) என்ற மகனும் உள்ளனர். இதில் சந்தியாவுக்கு திருமணம் ஆகி விட்டது.
தற்போது குளிர்காலம் என்பதால் தேவராஜன் வீட்டில் உள்ள ஜன்னல்கள் உள்பட அனைத்து கதவுகளையும் மூடி வைத்திருந்தார். இந்த நிலையில் அதிகாலை சுமார் 5.45 மணி அளவில் தேவராஜன் பால் காய்ச்சுவதற்காக சமையல் அறைக்கு சென்றார். ஆனால் ஏற்கனவே கேஸ் அடுப்பில் இருந்து கசிவு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதைக் கவனிக்காமல் தேவராஜன் அடுப்பை பற்ற வைத்த போது, திடீரென கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்து சிதறியதில், மேல்தளத்தில் இருந்த 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் மரண ஓல சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஓடோடி வந்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து சேலம் மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோட்ட அலுவலர் எழிலரசு தலைமையில் உதவி கோட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை எளிதில் மீட்பதற்காக நவீன கருவிகளை கொண்ட அவசர கால ஊர்தி வண்டியும் வரவழைக்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலமும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த தேவராஜன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அகமது மகன் சித்திக் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி ஆயிஷாவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இடிபாடுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்த தேவராஜனின் மனைவி மல்லிகாவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் 90 சதவீத தீக்காயத்துடன் படுகாயம் அடைந்த தேவராஜன் பேத்தி தீபதர்ஷினி(6) நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
விபத்து நடந்த பகுதியை மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இதே போல், சேலம் சரக டி.ஐ.ஜி. சஞ்சய்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடந்த வீட்டில் வெடிபொருட்கள் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தேவராஜன் மகள் சந்தியா(25), மகன் குமார்(24), அகமது மற்றும் அவரது மகன் ஆசிப், மகள் சபிதா, குமரகுருபரன்(29) அவரது மனைவி மீனாட்சி(25) ஆகிய 7 பேர் படுகாயத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சந்தியா, குமார் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.