இந்த 5 சீட்டும் கண்டிப்பாக வேண்டும்- பாஜகவிடம் மதிமுக திட்டவட்டம்
சென்னை: தான் கேட்டுள்ள தொகுதிகளில் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளை யாருக்காகவும் விட்டுத் தர முடியாது என்று பாஜகவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாம் மதிமுக.
இந்த ஐந்து தொகுதிகள் தங்களுக்குக் கண்டிப்பாக வேண்டும் என்றும், இதை சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் மதிமுக கூறியுள்ளதாம்.
தேமுதிக, பாமக ஆகியவை பாஜக கூட்டணிக்குள் வரும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதால், அவர்களுக்காக தங்களது தொகுதிகளைக் காவு கொடுக்க மதிமுக தயாரில்லை என்பதையும் பாஜகவிடம் தெளிவுபடுத்தியுள்ளாராம் கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ.
போன மாதமே தொடங்கிய பேச்சு
மதிமுக, பாஜக இடையே கடந்த மாதமே தொகுதிப் பங்கீடு பேச்சுக்கள் தொடங்கி விட்டன. உண்மையில் மதிமுகவுடன்தான் முதலில் பேச்சையே ஆரம்பித்தது பாஜக.
திடீரென்று குழப்பிய தேமுதிக -பாமக
ஆனால் திடீரென தேமுதிகவும், பாமகவும் கூட்டணி தொடர்பாக ஏற்படுத்திய குழப்பங்களால் மதிமுகவின் தொகுதிகளை பாஜக குறைக்க ஆரம்பித்தது. மேலும், மதிமுக கேட்ட தொகுதிகளை ஒதுக்குவதிலும் அது சுணக்கம் காட்டியது. இதனால் டென்ஷனாகி விட்டது மதிமுக.
முதலில் கேட்டது 12
முதலில் மதிமுக 12 சீட்களைக் கேட்டது. பல சுற்றுப் பேச்சுக்களுக்குப் பின்னர் இது 9 ஆக குறைந்தது.
ஐந்து தொகுதிகள் கட்டாயம்
தற்போது மேலும் தனது நிலையை பாஜக மோசமாக்கி விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மதிமுக இறங்கியுள்ளது. அதாவது தான் கேட்டுள்ள தொகுதிகளில் 5 தொகுதிகள் கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விட்டதாம்.
எவை எவை
விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, காஞ்சிபுரம், பொள்ளாச்சி ஆகியவை அவை. இதில் விருதுநகரில் வைகோ போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இவை போக
இவை போக தேனி, தென்காசி, மத்திய சென்னை, மதுரை ஆகிய தொகுதிகளையும் மதிமுக கேட்டுள்ளது.
தேமுதிக - பாமகவும்
மதிமுக கேட்டுள்ள பல தொகுதிகளை தேமுதிக, பாமகவும் கேட்டு அடம் பிடிப்பதால் பாஜகவினர் மண்டை காய்ந்து போய் உட்கார்ந்துள்ளனராம்.