கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த 5 பேருக்கு திடீர் மயக்கம்!
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 5 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்ட 5 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று காத்திருப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்கக் கோரியும் கடந்த 2 நாள்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கதிராமங்கலம் மக்கள் தொடங்கினர்.
அதில் தண்ணீர் கூட குடிக்காததால் சண்முகசுந்தரம், அமுதா, ராஜேந்திரன், முருகானந்தம் , கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் மயக்கமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.