பொறியியல் முதல் பருவத் தேர்வு ஷாக் ரிசல்ட்... கணிதம், இயற்பியலில் 50% பேர் ஃபெயில்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற முதல் பருவத் தேர்வில் சுமார் 50 சதவீத மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவில் தோல்வியடைந்துள்ளனர்.
சென்னை : 2017ம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிந்து அதற்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 50 சதவீதம் மாணவர்கள் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் தோல்வியடைந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வு முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் உள்ளிட்டவை அண்ணா பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகிறது.
2017ம் ஆண்டில் +2 முடித்து பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் மாதத்தில் முதல் பருவத் தேர்வு நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் பருவத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு முடிந்து தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.
50சதவீதம் மாணவர்கள் தோல்வி
அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மட்டுமின்றி மாணவர்களின் செல்போன்களுக்கும் மதிப்பெண் அனுப்பப்பட்டது. தேர்வு முடிவில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவில் சுமார் 50 சதவீத மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
குறைவான தேர்ச்சி விகிதம்
கணிதத்தில் 43.67 சதவீதம் மாணவர்களும், இயற்பியலில் 52.77 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே போன்று இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப ஆங்கிலத்தில் 55.68 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வகையிலான ப்ராப்ளம் சால்விங் பிரிவில் 61.7 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழ் வழியில் படிப்பவர்களும் தேர்ச்சி குறைவு
தமிழ் வழியில் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களை விட குறைவாகவே உள்ளன. எனினும் ப்ராப்ளம் சால்விங் பிரிவில் 64. 52 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கூடுதல் பயிற்சிக்கு திட்டம்
ஆங்கில வழி மாணவர்களை விட தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் 2.82 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பாடப்பிரிவிற்கு மிக முக்கியமான கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வியடைந்துள்ளதால் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.