சென்னையில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட 50 ஆட்டோக்கள் பறிமுதல்: 236 வழக்குகள் பதிவு
சென்னை: சென்னையில் அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் விதிமுறைகளை மீறிய 236 ஆட்டோக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 50 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் குறித்த ஆய்வை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து திங்கள்கிழமை அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.
சென்னையில் சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில், சென்னையில் இயங்கும் ஆட்டோக்களுக்கு கடந்த 2013 ஆகஸ்ட் 25-ஆம் தேதி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25ம், அதன்பின்னர் ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதமும் கட்டணம் வசூலிக்க வேண்டும். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுக் கட்டணமாக கூடுதலாக 50 சதவீதத்தை பயணிகள் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் அறிவித்துள்ளது.
கட்டண கொள்ளை
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த நிலையிலும் சென்னையில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையானது. மீட்டர்கள் இயக்கப்படுவதில்லை என்றும் போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் எழுந்தன.
போலீசார் சோதனை
இதைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து திங்கட்கிழமையன்று சென்னை மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை முழுவதும் அதிரடி
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்துப் போலீஸார் இணைந்த 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட சென்னை மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
15 நாட்களுக்கு ஆய்வு
ஆட்டோக்களில் மீட்டர் இயக்கப்படுகிறதா, பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. வாகனத்தின் ஆவணங்கள் முறையாக உள்ளனவா என்பன உள்ளிட்ட விவரங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், 15 நாள்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். அடுத்ததாக, புதிய குழுக்கள் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
236 ஆட்டோக்கள் மீது வழக்கு
இந்த ஆய்வில் மொத்தம் 2,506 ஆட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் விதிமுறைகளை மீறிய 236 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், முறையாக ஆவணங்கள் இல்லாதது, மீட்டர் இயங்காதது உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 50 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் ஆட்டோக்கள் தீவுத் திடலில் பாதுகாப்பாக நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பொதுமக்கள் அதிருப்தி
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ மீது நடிவடிக்கை என்பது கண்துடைப்பு எனப்புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ் அதிரடி நடவடிக்கை என கூறியும் கூடுதல் கட்டணம் வசூல் நிற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநர் மீது அபராதமும் விதிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துதுள்ளனர்.