544 முன்னாள் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் - இன்னாள் மாணவர்கள் நிலை?
சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் கடந்த வருட மாணவர்களில் 544 பேர் மருத்துவ இடங்களைப் பெற்றிருப்பதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
எனினும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த இந்த வருட மாணவர்களின் பெற்றோர் இந்த தரவரிசைப்பட்டியலில் நிறைவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஏனெனில், கடந்த வருட மாணவர்களில் கிட்டதட்ட 1000 பேர் இந்த வருடம் அரசு கோட்டாவில் இடங்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.
மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலர் ஒருவர் இதுகுறித்து, "இந்த வருட மாணவர்களுக்காக 1,653 இடங்கள் பொது கவுன்சிலிங்கிற்காகவும், சிறப்பு பிரிவிற்காக 2,257 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
"நீதிமன்ற ஆணையின் படி நாங்கள் 548 இடங்களை கடந்த வருட மாணவர்களுக்காக ஒதுக்கியுள்ளோம். முதல் கட்ட கலந்தாவில் 544 இடங்கள் மட்டுமே அளித்துள்ளோம்" என்று தேர்வுக் குழுவின் செயலாளர் டாக்டர் உஷா சதாசிவன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த முறையால் நடப்பு வருடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. கடந்த வருடம் மற்றும் இந்த வருட கட் ஆப் மதிப்பெண்களை ஆராய்ந்து பார்த்தால் எல்லா வகையிலும் 1 மதிப்பெண் இடைவெளி எழுகின்றது. "கடந்த வருடமே அதிக மதிப்பெண்களை அந்த மாணவர்கள் பெற்றிருக்கும்போது ஏன் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை?" என்று இந்த வருட மாணவர் ஒருவரின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மருத்துவ கல்வி இயக்ககத்தின்படி இந்த வருடம் இடம்பெற தகுதி பெற்ற மாணவர்கள் எல்லோருமே நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அப்படியெனில் கடந்த வருடம் இவர்களெல்லாம் சுயநிதிக் கல்லூரிகளில் கூட இடம் கிடைக்காமல் போய்விட்டார்களா? இல்லை வேண்டுமென்றே இடங்களை விட்டு கொடுத்து விட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த முதல் கட்ட கவுன்சிலிங்கின்படி, 2,939 இடங்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. "அரசு இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன. தனியார் கல்லூரிகளில் 597 இடங்கள் உள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன" என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. எனினும், போன வருட மாணவர்களை உள்ளே இழுத்து, சுயநிதிக் கல்லூரிகளுக்கு உதவுகின்றதா அரசு என்கின்ற கேள்வியும் பெற்றோர் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.