ஆசிரியர்கள் கண்டித்ததால் விஷம் சாப்பிட்ட 7 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரை அருகே, சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த பள்ளி மாணவிகள் 7 பேர் வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைப்பட்டியில் இயங்கி வரும் மதுரை கிழக்கு ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருபவர்கள் வினிசிகா, செல்வி, ஜெயந்தி, ஜெகதீஸ்வரி, ஒய்யம்மாள், சிவனேஸ்வரி, ஆழிப்பொண்ணு ஆகியோர். ஒரே பகுதியைச் சேர்ந்த இவர்கள் 7 பேரும் தோழிகளாம்.
இவர்கள் சரியாக படிப்பது இல்லை என ஆசிரியர்கள் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். வழக்கம் போல நேற்றும் மாணவிகளை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, பள்ளி இடைவேளையின் போது பள்ளியின் பின்புறம் சென்ற அவர்கள், தாங்கள் முன்னதாகவே வாங்கி வைத்திருந்த விஷமருந்தை வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.
இடைவேளை முடிந்த பின்னரும் மாணவிகள் வகுப்பறைக்கு வராததால் சந்தேகமடைந்த ஆசிரியர், மாணவிகளை தேடிய போது, அவர்கள் பள்ளியின் பின்புறம் மயங்கிக்கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக மீட்கப்பட்ட மாணவிகள் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பகல் 12.30 மணிக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கும், மாணவிகள் அனுமதிக்கப்பட்டு உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.