பொங்கலை ஹேப்பியா கொண்டாடுங்க.. தமிழகத்தில் 7000 சிறப்பு பஸ்கள் இயக்கம்
7 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் பொங்கலையொட்டி இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
Recommended Video

சென்னை: பொங்கலையொட்டி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுவதாகவும் அதில் பல லட்சம் மக்கள் பயணம் செய்து வருவதாகவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கம் முழுவேகமாக நடைபெற்று வருகிறது.

முடிவுக்கு வந்த ஸ்டிரைக்
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருந்து வந்த போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் வாபஸ் வாங்கப்பட்ட நிலையில், 11ம் தேதி இரவிலிருந்தே சொந்த ஊர்நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். 12ம் தேதி அரசும் சிறப்பு விடுமுறை அளித்ததால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டன.

சிறப்பு பேருந்து நிலையங்கள்
பயணிகள் நெரிசலில் சிக்காமல் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தாம்பரம், சானிட்டோரியம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுகின்றன.

அமைச்சர் அதிரடி ஆய்வு
தற்காலிக மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அமைச்சர் திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதையொட்டி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பணியாளர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

சிறப்பு கவுண்டர்கள்
தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்துநிலையங்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்டரும் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரைநோக்கி படையெடுப்பு
சென்னையிலிருந்து 11-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய 2 நாட்களில் வெளியூர்களுக்கு 54,440 பயணிகளும், இதர இடங்களிலிருந்து 28,404 பயணிகளும், ஆக மொத்தம் 82,844 பயணிகள் முன்பதிவு செய்து இதுவரை பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில்
11-ந்தேதி மற்றும் 12-ந்தேதி ஆகிய 2 நாட்களில் சென்னையிலிருந்து இதுவரை 4242 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,27,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்த பின் மொத்தம் 7841 சிறப்பு பஸ்கள் அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications