புதுக்கோட்டை வாக்காளர் பட்டியலில் 95,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர் - திமுக பரபரப்புப் புகார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர் பட்டியலில் 95 ஆயிரம் பேர் தவறாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பார்வையாளரிடம் தி.மு.கவினர் புகார் அளித்தனர்.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர்கள் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான சிறப்பு தேர்தல் பார்வையாளர் மணிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 95 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக 35 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே 5 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளனர்.
தேர்தல் அலுவலர்கள் உள்நோக்கத்தோடு இந்த பட்டியலை தயாரித்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் சரியான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ணன் அரசு தெரிவித்தார்.
இதே கருத்தை வலியுறுத்தி பேசிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரும் குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிடவேண்டும் என்று தெரிவித்தனர். புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் சிறப்பு பார்வையாளர் மணிவாசன் கூறினார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி, அடப்பன்வயல் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளில் வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு செய்தார்.