மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் போட்டோ எடுத்தாரா எச். ராஜா.. புது சர்ச்சை
மதுரை: தீ விபத்து நிகழ்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டது புதிய சர்ச்சையாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வருபவர் எச். ராஜா. தமிழகத்தில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுவருவதாக நாள்தோறும் புலம்பி வருகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அதை சதி என்றார். அத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த புகைப்படங்களை எச். ராஜாவை தலைவராக கொண்ட ஹிந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படம், போட்டோ எடுக்க தடை செய்யப்பட்ட இடம் என்ற இடத்துக்கு கீழே எடுக்கப்பட்டுள்ளது.
இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்து ஆலயத்தை மீட்பதாக சொல்லிக் கொண்டு விதிகளை காலில் மிதிப்போரிடமா நிர்வாகத்தை ஒப்படைப்பது என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.