”பிச்சை புகினும் கற்கை நன்றே” படிக்க வயது தடை இல்லை என நிரூபித்த தந்தை
நாகை: படிப்பதற்கு வயது தடையில்லை என்ற கூற்றின்படி பிளஸ் 2 தேர்வெழுதியுள்ளார் ஒரு தந்தை, தனது மகளுடன் இணைந்து.
நாகை மாவட்டம் சீர்காழியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை தந்தையும் மகளும் வெவ்வேறு மையங்களில் எழுதிய சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.
சீர்காழி வட்டம், வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கு. மாரிமுத்து . இவர் ஒரு சாலைப் பணியாளர்.
ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில், மாரிமுத்துவுக்கு மேற்படிப்பு படிக்க ஆசை. இதுகுறித்து தனது மூத்த மகள் சுபஸ்ரீதேவியிடம் தெரிவித்தார்.
சுபஸ்ரீதேவியும் தனது தந்தை தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உதவி செய்தார்.
இதன்படி, 2010-ம் ஆண்டு மூத்த மகள் சுபஸ்ரீதேவியுடன், மாரிமுத்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். படிப்பிற்கு வயது தடையில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மாரிமுத்து வரலாறு பாடப் பிரிவை விருப்பப் பாடமாக எடுத்து, பிளஸ் 2 தேர்வை மகள் சுபஸ்ரீதேவியுடன் எழுதினார்.
ஆனால் அவர் வணிகவியல், பொருளியல் பாடங்களில் தோல்வியடைந்தார்.
சற்றும் மனம் தளராத மாரிமுத்து, தனித்தேர்வராக இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வெழுதினார். ஆனால், இந்த முறை தனது இளைய மகள் மோனிஷாவுடன் அவர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை மோனிஷா சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாரிமுத்து செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தேர்வு மையத்திலும் தேர்வெழுதினர்.