ராஜேந்திர பாலாஜியா, கொக்கா.. தனியார் பாலுக்குப் போட்டியாக ரூ. 10 ஆவின் பாலை களம் இறக்கினார்!
தமிழகத்தில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
சென்னை: தனியார் பால் நிறுவனங்களை போல் இனி ரூ.10-க்கு ஆவின் பால் வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பால் வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன.

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 23 அறிவிப்புகள் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தனியார் பால் நிறுவனங்கள் குறைந்த மில்லி லிட்டரில் பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருவதை போல் ஆவின் பாலிலும் அத்தகைய குறைந்த அளவிலான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.
அதன்படி, ரூ.10-க்கு 225 மில்லி லிட்டர் அளவு கொண்ட பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும். இதில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்தும், 8.5 சதவீதம் இதர சத்துகளும் இருக்கும். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களும் சத்தான பாலை அருந்துவதற்கு வழி வகை செய்யப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஒன்றியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 5439 ஊழியர்களுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும். சேலத்தில் ரூ.10 கோடியில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications