கோவை: 2வது நாளாக கெட்டுப் போன பல ஆயிரம் லிட்டர் ஆவின் பால்- தரையில் கொட்டி போராட்டம்
கோவை: கோவையில் கெட்டுப்போன ஆவின் பால் இரண்டாவது நாளாக வினியோகிக்கப்பட்டதால் முகவர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் காந்திபுரம், கணபதி, காந்திமாநகர், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், மதுக்கரை, டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து முகவர்களின் மூலம் பால் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதியன்று விநியோகிக்கப்பட்ட ஆவின் பாலில் 30 ஆயிரம் லிட்டர் கெட்டுப்போனதாக காந்திபுரம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் புகார் எழுந்தன. பச்சாபாளையம் முகவர்கள் ஆவின் நிறுவனத்திடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து ஆவின் நிர்வாகம் கூறியபோது, மின் தடையால் குளிர்விப்பான்கள் செயல்படாததால் ஆவின்பால் கெட்டுபோனது. 5 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனது. கெட்டுப்போன பாலுக்கு ஈடாக முகவர்களுக்கு புதிய பால் பாக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ரமணா, கெட்டுப்போன ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று துடியலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகிக்கப்பட்ட பால் கெட்டுப்போய் இருந்தது. புதன்கிழமையன்று காலையில் சிவானந்தகாலனியில் உள்ள வடக்கு ஆவின் பால் விற்பனை மண்டல அலுவலகத்தின் மூலம் வினியோகிக்கப்பட்ட பாலும் கெட்டுப்போய் இருந்துள்ளது.
இதுதொடர்பாக முகவர்கள், ஆர்.எஸ்.புரம் மண்டல அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது, வடக்கு மண்டல அலுவலகத்திடம் கேளுங்கள் என்று கூறி விட்டனர். இதன்பிறகு, வடக்கு மண்டல அலுவலகம் முன்பு தரையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆர்.எஸ்.புரம் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். தங்களுக்கு கெட்டுப்போன பாலுக்கு முழு பணமும் திரும்ப தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனையடுத்து அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட முகவர்களிடம் இருந்து கெட்டுப்போன பால் பாக்கெட்டை பெற்றுக்கொண்டு புகார் கடிதம் எழுதி வாங்கி கொண்டனர்
தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறிவரும் நிலையில் கோவையில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையால் பல ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போய் வீணாகியுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.