"சிபிசிஐடி" தம்பியின் பாதுகாப்பில் செம்மரக் கடத்தல் டிஎஸ்பி தங்கவேலு!
வேலூர்: செம்மரக் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும் வேலூர் டிஎஸ்பி தங்கவேலுவுக்கு அரசியல் பாதுகாப்பும் காவல்துறையிலேயே ஒரு தரப்பு பாதுகாப்பும் இருப்பதால் அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனராம்.
குறிப்பாக தங்கவேலுவின் தம்பிதான், தனது அண்ணனை பாதுகாத்து வருகிறாராம். இந்தத் தம்பி திருச்சியில் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறாராம். இவர்தான், பாதுகாப்பான இடத்தில் தனது அண்ணனை தங்க வைத்து காத்து வருவதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
வேலூர் கலால் பிரிவு டிஎஸ்பியாக இருப்பவர் தங்கவேலு. இவர் சமீபத்தில் செம்மரக் கடத்தல் வழக்கில் சிக்கினார். வேலூர்: ஆம்பூர் மாதனுரைச் சேர்ந்த முன்னாள் பாமக ஒன்றிய செயலாளர் சின்னபையன் என்பவர், செம்மரக் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாகேந்திரன் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவும் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தலைமறைவான தங்கவேலு இதுவரை கிடைக்கவில்லை. போலீஸ் வாகனத்துடன் அவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், டிஎஸ்பி தங்கவேலுவை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூர், திருச்சி, மதுரை உட்பட பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி தங்கவேலு திருச்சியில் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள தனது தம்பியிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
டிஎஸ்பி இருக்கும் இடத்தின் அருகே போலீஸ் படை போயும், உயர் அதிகாரிகள் சிலரின் தலையீடு காரணமாக அவரைப் பிடிக்க முடியாமல் போய் விட்டது. அரசியல் செல்வாக்கும் அவரைக் காத்து வருகிறது. அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். போலீஸ் வாகனம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.