அதிமுகவின் தேர்தல் ஆயுதமாகுமா ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட மறுரிலீஸ்...??
சென்னை: புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் இணைந்து நடித்த படமான ‘ஆயிரத்தில் ஒருவன்' படம் தற்போது மீண்டும் டிஜிட்டலில் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. அதன்படி, கட்சித் தலைவர்களின் போஸ்டர்களை சுவர்களில் ஒட்ட நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.
ஆனால், சினிமா போஸ்டர்களாக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் படங்கள் சுவர்களை அலங்கரிப்பது பிறக் கட்சிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியுள்ளது.
டிஜிட்டலில்...
49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். வசூலில் சாதனை படைத்த இப்படம் தற்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
வாழ்த்து...
தனது படத்தின் மறுவெளியீடிற்கு முதல்வர் ஜெயலலிதாவும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். முதல்வரின் வாழ்த்துச் செய்தி கிடைக்கப் பெற்ற திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கமும் பிறந்த பேறினை அடைந்து விட்டேன் என புல்லரித்துள்ளார்.
புரட்சித்தலைவர்...
ஆனால், இப்படத்தின் மறுவெளியீடு பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பது என்னவோ உண்மைதான். காரணம் அப்படத்தில் அடிமைப்பட்ட மக்களின் விடுதலைக்காக எம்.ஜி.ஆர் போராடி இருப்பார்.
கூட்டிக் கழிச்சுப் பாரு...
கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்து ராஜீவ் கொலையாளிகள் விடுதலையுடன் ஒப்பிட்டு தமிழக வாக்காளர்கள் முடிவு செய்து விடுவார்களோ என அஞ்சுகிறார்களாம் சிலர்.
அரசியல் சாயமில்லை...
35எம்.எம்மாக இருந்த ஆயிரத்தில் ஒருவரை டிஜிட்டலில் மாற்றி வெளியிட்டதில் அரசியல் இல்லை என திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் தேர்தல் ஆணையம் அதனை நம்ப மறுக்கிறதாம்.
தடை...
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், ‘படத்தை வெளியிடுவதை நாங்கள் தடை செய்ய முடியாது. ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் கட்சித் தலைவரின் போட்டோவை போஸ்டர்களாக ஒட்டுவதை எங்களால் தடை செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
தியேட்டருக்குள் மட்டும்...
மேலும், தியேட்டர் வளாகத்தின் உட்பகுதியில் வேண்டுமானால் பேனர் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் முடியும் வரை போஸ்டர்கள் ஒட்டாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளாராம் அவர்.
ஒரு படம் = 10 பொதுக் கூட்டம்
நாளை வெளியாக உள்ளது இப்படம். தலைவரின் ஒரு படத்தை ஒரு முறைப் பார்த்தாலே அது பத்து பொதுக்கூட்டம் நடத்தியதற்கு சமம் என கழகத் தோழர்கள் சொல்லி வருகிறார்களாம்.
நாங்களும் அப்டிதான்....
இதற்கிடையே தேர்தல் களத்தில் உள்ள கேப்டனின் படத்தையும் மறுவெளியீடு செய்யலாமா என அவரது தொண்டர்கள் ஆலோசித்து வருகிறார்களாம். காரணம் கருப்பு எம்.ஜி.ஆர் என தன்னைச் சொல்லிக் கொண்ட கேப்டனின் படங்களும் ஏறத்தாழ புரட்சித் தலைவர் படத்தைப் போல மக்களின் உரிமைக்காக போராடும் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.