டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை கையில் எடுங்கள்... ரசிகர் மன்றத்தினருக்கு கமல் இட்ட கட்டளை!
டெங்குவை ஒழிக்க களப்பணியாற்றுமாறு ரசிகர்கர் மன்றத்தினரை நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : டெங்கு ஒழிப்புக்காக வீடு வீடாக சென்று களப்பணியாற்ற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தினரை கேட்டுக்கொண்டுள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். விரைவில் தனிக்கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தமிழக அரசியல் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் சென்னையில் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களிடம் கமல்ஹாசன் கருத்து கேட்பதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின.
பயனளிக்கும் வகையில் செயல்பட அறிவுறுத்தல்
ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர் மன்ற நிர்வாகிகள், கர்நாடக மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றோம். மக்களுக்கு கமல் நற்பணி மன்றத்தினர் எவ்வாறு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.
விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தல்
ஏற்கனவே மக்கள் பணியாற்றி வருவதை பாராட்டிய அவர், இன்னும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று உந்துதல் அளித்தார். குறிப்பாக தமிழகத்தை மிரட்டிப் பார்க்கும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு கமல் அறிவுறுத்தியுள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.
முறையாக அறிவிப்பார்
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அரசியல் குறித்து எந்த கருத்துக் கேட்பும் நடைபெறவில்லை என்றனர். கமல் அரசியலுக்கு வருவதாகக் கூறியிருக்கிறார், அவர் திட்டம் போட்டுத் தான் அரசியலுக்கு வருவார். அதற்கான அறிவிப்பை முறையாக அறிவிப்பார்.
அரசியல் குறித்து பின்னர் கூறுவார்
கமல்ஹாசன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அரசியலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பின்னர் தெரிவிப்பதாக கமல் தெரிவித்ததாகவும் ஆலோசனையில் பங்கேற்ற நற்பணி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.