செம்மரக் கடத்தல்: தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறார்கள்... கமிஷனரிடம் நடிகர் சரவணன் புகார்
சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தனது பெயரைத் தேவையில்லாமல் இழுப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நடிகர் சரவணன் புகார் கொடுத்தார்.
செம்மரக் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை சமீப காலமாக கிளப்பி வருகிறது. சமீபத்தில் திருப்பதி அருகே வனப்பகுதியில் வைத்து 20 தமிழர்களை ஈவு இரக்கமே இல்லாமல் ஆந்திரப் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவி வந்த நல்லுறவில் விரிசல் விழுந்துள்ளது.
இந்த நிலையில் சில முன்னாள் ஆந்திர, தமிழக அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்,அவர்களைப் போலீஸார் கைது செய்ய முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் தனது பெயரை தேவையில்லாமல் செம்மரக் கடத்தலுடன் இணைத்து சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக நடிகர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர போலீஸார் நடிகர் சரவணன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் எழுதியிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், தான் தாம்பரம் அருகே படப்பிடிப்பில் இருந்ததாகவும், தான் கைது செய்யப்படவில்லை என்றும் தேவையில்லாமல் தனது பெயரை ஏன் இதில் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அவர் புகார் மனு ஒன்றை அளித்து விட்டுச் சென்றார்.