ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக களமிறங்கிய விஷால்.. பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பசுமைத் தீ்ர்ப்பாயத்தில் நடிகர் விஷால் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் தொடர்ந்து 20 நாள்களாக போராடி வருகின்றனர்.
விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த அனுமதிக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே தவிர அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதேபோல், இந்தத் திட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனரே தவிர மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
நெடுவாசல் மக்களின் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில் அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.