40 தொகுதிகளிலும் நாளை அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல்!
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
ஏற்கனவே வேட்பாளர்கள் தத்தமது தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை அனைவரும் ஒரே நாளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.
இதையடுத்து நாளை 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தடபுடலாக ஆள் பலத்துடன், வாகன பலத்துடன் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.
அனைத்துத் தொகுதிகளிலும் பேரணியாக, பெரும் கூட்டத்துடன் செல்லவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனராம்.
29ம் தேதி முதல்
மார்ச் 29ம் தேதி முதல் தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மார்ச் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களும் அரசு விடுமுறையாகும்.
ஏப்ரல் 5ம் தேதி வரை
ஏப்ரல் 5ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
நாளை அதிமுக மனு தாக்கல்
இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி அதாவது நாளை முதல் மனு தாக்கல் மீண்டும் சூடு பிடிக்கிறது. நாளை நல்ல நாள் என்பதால் நாளையே அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்கின்றனர். பிற்பகலில் அவர்கள் மனுத் தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
நல்ல நாள் பார்க்கும் பாஜக
திமுக வேட்பாளர்கள் என்று மனுத் தாக்கல் செய்வார்கள் என்று தெரியவில்லை. பாஜகவினரும் நல்ல நாள் பார்த்து வருகின்றனராம்.
மதிமுகவும் நாளையே
அதேசமயம், மதிமுக வேட்பாளர்கள் நாளை மனுத் தாக்கல் செய்கிறார்கள்.
பாமக 3ம் தேதி
பாமகவினர் ஏப்ரல் 3ம் தேதி மனு தாக்கல் செய்கிறார்கள்.
கடைசி நாளில் தேமுதிக
தேமுதிகவினர் கடைசி நாளான 5ம் தேதி மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.