அதிமுகவில் இருந்து பரிதி இளம்வழுதி நீக்கம்... டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதால் நடவடிக்கை!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நீக்கப்பட்டுள்ளார். டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். பரிதி இளம்வழுதியுடன் தென்சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் அசைக்க முடியாத முக்கியப் புள்ளியாக இருந்தவர் பரிதி இளம்வழுதி. திமுகவின் பாரம்பரியத்தில் வந்த இவர் திமுகவின் இளம் படைத் தளபதிகளில் ஒருவராகவும் வலம் வந்தார். எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராகவும் இவர் இருந்தார்.
2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளரிடம் தோல்வியடைந்த பரிதி இளம்வழுதி அப்போது முதல் திமுகவில் ஓரம்கட்டப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அவர்திடீரென ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் கடந்த 2013ம் ஆண்டு இணைந்தார். அதிமுகவில் அவருக்கு செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதிமுகவில் சேர்ந்த பரிதி
தொடர்ந்து அதிமுகவிற்காக செயல்பட்டு வந்த பரிதி இளம்வழுதி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். ஆனால் அங்கும் நீடித்திருக்காமல் டிடிவி.தினகரன் அணி தனியாக பிரிந்த போது டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு
இப்படி மாறி மாறி ஆதரவு தெரிவித்தாலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி இணைந்த பின்னர் பரிதி இளம்வழுதியின் அரசியல் அமைதியாகவே இருந்தது. இந்நிலையில் இன்று அதிரடியாக பரிதியை கட்சியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினகரன் அணிக்கு தாவிய பரிதி
டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல அதிமுக நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தொடர்பு கூடாது
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்கள் இனி அதிமுக பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கப்பட்டவர்களுடன் மற்ற அதிமுகவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.