உடல் நலம் தேறிய ஜெ. திடீரென இறந்தது எப்படி? வீடியோவை பார்த்து ஸ்டாலினுக்கு வந்த சந்தேகம்
ஜெயலலிதா வீடியோவை தேர்தல் ஆதாயத்திற்காக மட்டும் பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர் சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகளை வெளியிடாமல் தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்து உள்ளார்.
டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இது தற்போது தமிழக அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.
இதுநாள் வரை ஜெயலலிதாவின் மரனத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அப்போது எல்லாம் வெளியிடாமல் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை நாளை வைத்துக்கொண்டு இன்று இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பது குறித்து முகநூலில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தனது கருத்தினை பதிவிட்டு உள்ளார். அந்தப்பதிவில்,
சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்ட வீடியோ
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்றபோதே அவரது உடல் நிலையைப் பற்றி தமிழக மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக, மருத்துவமனை யிலேயே அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்பட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு தலைவர் கலைஞர் வலியுறுத்தினார். அம்மையார் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பொது மக்கள் ஆர்வத்துடன் கேட்டபோதும் வெளியிடுவது குறித்து அக்கறை காட்டாதவர்கள், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில், தங்கள் சொந்தக் கட்சிப் பிரச்சினையை சமாளிக்கவும், மக்களைத் திசைதிருப்பிடவும் சுய நலத்திற்காக மரணத்திற்குப் பிறகும் ஜெயலலிதாவை எப்போதும் போல் பலிகடா ஆக்கிட முன்வந்துள்ளனர். இது வேதனை அளிப்பதாக உள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்
இந்த வீடியோவை பார்க்குபோது இந்த அளவுக்கு உடல் நிலைதேறிய அம்மையார் அவர்கள் திடீரென்று மர்மமான முறையில் மரணமடைந்தது எப்படி? என்ற கேள்வி எவருடைய மனதிலும் எழாமல் இருக்காது. இதற்கு அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், இப்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்கள் மத்தியில் நிலவும் ஆழமான சந்தேகத்திற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஏன் பணப்பட்டுவாடா நடவடிக்கை இல்லை ?
மேலும், இந்த வீடியோ பதிவு தொடர்பாக அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின். அப்போது, விசாரணை கமிஷனிடம் கொடுக்காமல் தேர்தல் சமயத்தில் வீடியோ வெளியிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், இதில் தேர்தல் ஆணையம் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறதோ, அதே அளவுக்கு, காவல் துறையின் துணையோடு ஆளுங்கட்சி வாக்காளர்களுக்கு தலா ரூ.6,000 ரூபாய் வழங்கியது குறித்து நாங்கள் பலமுறை புகாரளித்தும் அதுகுறித்து ஏன் அக்கறை காட்டவில்லை, இதுவரையிலும் தேர்தல் ஆணையம் அதுகுறித்து ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் எனது கேள்வி என்று குறிப்பிட்டார்.
ஜெ., மரணத்தில் குழப்பம்
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வீடியோ காட்சி வெளியிடப்பட்ட செய்தியை நானும் பார்த்தேன். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, பலவித செய்திகள் மக்களிடையே வலம் வந்து கொண்டிருந்தன. காவேரி பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் வந்து பேசினார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அதுபோன்ற புகைப்பட காட்சிகள், வீடியோ காட்சிகளை ஏன் உடனே வெளியிடவில்லை, அப்படி வெளியிட்டிருந்தால் மக்களுடைய குழப்பம் வந்திருக்காது என்று அப்போதே தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்து இருந்தார்.
அன்றே வெளியிட்டு இருக்கலாம்
இந்த வீடியோவை அன்றைக்கே வெளியிட்டு இருந்தால், இந்தப் பிரச்னையே வந்திருக்காது என்பதுதான் என்னுடைய கருத்து. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தை பொறுத்தவரையில், அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், அவரது மரணத்தையே அரசியலாக்கும் அளவுக்கு, இவ்வளவு கீழ்த்தரமாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த வீடியோ இடைத்தேர்தலில் வாக்களிக்கப்போகும் மக்கள் மனதில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.