இளங்கோவனின் ஈரோடு வீட்டின் முன்பு துடைப்பத்துடன் குவிந்த அதிமுக மகளிர்.. பெரும் பரபரப்பு
ஈரோடு: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வீட்டினை முற்றுகையிட்டு அதிமுக.,வினர் போராட்டம் நடத்தி வருவதால் ஈரோட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட பெண்கள் துடைப்பட்டதுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா - பிரதமர் மோடி சந்திப்பு குறித்து கொச்சைப்படுத்தி பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்ற வருகின்றது.
இந்நிலையில் ஈரோடு, கச்சேரி தெருவில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான வீட்டை முற்றுகையிட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், திருப்பூர் தொகுதி எம்.பி சத்யபாமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பெண்களும், திருநங்கைகளும் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் கைகளில் துடைப்பத்தை ஏந்தியிருந்தனர் இதனால் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி சத்யபாமா, திருப்பூரில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்க கையாலாகாத இளங்கோவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேட்டார். பெண் என்றும் பாராமல், அவரது வயதையும், உடல்நிலையையும் கூட கருத்தில் கொள்ளாமல் அவதூறாக பேசியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அன்றைக்கு குடிபோதையும் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்றைக்கு தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார் என்றும் கூறினார்.
இந்த நிலையில் எஸ்.பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வீட்டை சுற்றியுள்ள 6 தெருக்களில் 100 மீட்டர் வரை இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.