இரட்டை இலை பெற லஞ்சம் .... சசி அணிக்கு சிக்கல் அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?
இரட்டை இலை சின்னம், சசிகலா பொதுச்செயலாளர் பதவி தொடர்பான விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள நிலையில் சின்னம் பெற ரூ. 60 கோடி லஞ்சம் தர டிடிவி தினகரன் பேரம் பேசியுள்ளது .
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா நியமனம் தொடர்பாக டெல்லியில் சசிகலா, ஓபிஎஸ் அணியிடம் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. இரட்டை இலை யாருக்கு கிடைக்கும், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா? என்பது இன்றைக்கு தெரியவரும் என்று கூறப்பட்ட நிலையில் இரட்டை இலையை பெற இடைத்தரகர் மூலம் ரூ. 60 கோடியை டிடிவி தினகரன் தரப்பு பேரம் பேசியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கைதான சுகேஷ் சந்திரா என்பவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சி 2 மாதம் நடைபெற்றது. சசிகலா பொதுச்செயலாளராக டிசம்பர் இறுதியில் தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி 7ஆம் தேதிக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது.
ஓபிஎஸ் அணியில்10 எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இணைந்தனர். சசிகலா அணியினர் 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து வைத்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பிப்ரவரி 16ஆம் தேதி பதவியேற்றது.

தேர்தல் ஆணையத்தில் புகார்
இதனிடையே கட்சியைக் கைப்பற்ற ஒபிஎஸ் அணி முயற்சி மேற்கொண்டது. சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியின் சார்பில் எம்பி. மைத்ரேயன் புகார் கொடுத்தார். இந்த மனு மீது சசிகலா பதிலளித்திருந்தார்.

இரட்டை இலை சின்னம்
இந்த சூழ்நிலையில்தான் ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைதேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் இரு அணிகளும் போட்டியிட்டன. தங்களுக்கு இரட்டைஇலை சின்னத்தை ஒதுக்க கோரி ஒபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். பதிலுக்கு சசிகலா இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

கட்சி, சின்னம் முடக்கம்
இந்த நிலையில், இரண்டு அணியினரும் கடந்த மார்ச் 22ம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி தங்களது விளக்கம் அளித்தனர். அவர்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. அப்போது, இரண்டு தரப்பினரும் ஏராளமான ஆவணங்கள் அளித்துள்ளதால் முடிவு எடுக்க நேரம் தேவைப்படுகிறது எனக்கூறி இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி பெயர், கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது.

புதிய கட்சி, சின்னங்கள்
இதை தொடர்ந்து, சசிகலா அணிக்கு அதிமுக அம்மா அணியும், ஓபிஎஸ் அணிக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா என்று இரண்டு அணிகளுக்கு தேர்தல் ஆணையம் பெயர் வைத்துக்கொள்ள அனுமதி அளித்தது. தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக அம்மா அணிக்கு தொப்பி சின்னமும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிக்கு மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஒபிஎஸ் அணி
பணப்பட்டுவாடா புகாரினால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சியில் அதிமுகவின் இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. ஓபிஎஸ் அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே, ஓபிஎஸ் அணி சார்பில் தங்களுக்கு கட்சியில் லட்சக்கணக்கானோர் ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சசிகலா அணி
இந்த நிலையில் சசிகலா அணியினரும் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆதரவை திரட்டும் பணியில் இறங்கினர். நிர்வாகிகளுடம் கையெழுத்து பெற்றனர். மேலும் சசிகலா அணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் 8 வார காலம் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றுள்ள ஆவணங்களை இன்று அந்த அணி தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தேர்தல் ஆணையம் விசாரணை
இந்தநிலையில், இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு இரண்டு அணியின் தரப்பை சேர்ந்தவர்களும் இந்திய தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகவுள்ளனர்.

அவகாசம் அளிக்குமா?
சசிகலா பொதுச்செயலாளர் பதவி தப்புமாஈ அல்லது ஏற்கனவே சசிகலா தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதால் அதற்கான வாய்ப்பு அளிப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது முடிவை அறிவிக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரும்.

ரூ.60 கோடி பேரம்
இதனிடையே இன்று அதிகாலையில் சுகேஷ் சந்திரா என்பவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ. 60 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு முன்பணமாக ஒரு கோடியே 30 லட்சம் பெற்றதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சுகேஷ் சந்திராவை கைது செய்துள்ள போலீசார் டிடிவி தினகரன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது சசிகலா அணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications