ராஜினாமா செய்யுங்கள் "அம்மா".. அதிமுகவுக்குள் கலகக் குரல்!
சென்னை: ஒட்டுமொத்த அதிமுகவுமே எப்போது ஜெயலலிதா வெளியே வருவார் என்று காத்திருக்க ஒரே ஒரு குரல் கோவையிலிருந்து ஜெயலலிதாவுக்கு எதிராக கிளம்பியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஜெயலலிதா தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்தக் குரல் வலியுறுத்தியுள்ளது.
இப்போதைக்கு இது ஒரு குரல் மட்டும்தான் என்றாலும் கூட ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க அதிமுகவில் ஒருவர் கிளம்பியிருப்பது என்பதே பெரும் அதிர்ச்சிதான். எனவே இந்தக் குரலால் சற்று பதட்டமும் அதிமுகவை சூழ ஆரம்பித்துள்ளது.
ஆனால் இந்தக் குரலின் கோரிக்கை என்னவென்றால் இப்போதைய இக்கட்டான சூழலில் தனது பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலித ராஜினாமா செய்தால் அது மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை மேலும் அதிகரிக்கவும், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமையும் என்றும் கோவையைச் சேர்ந்த கே.ராமசுப்பிரமணியம் என்ற அந்த அதிமுக தொண்டர் கூறியுள்ளார்.
ராமசுப்பிரமணியம் இதுதொடர்பாக ஒரு பகிரங்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அதன் சாராம்சம்:
தவறு செய்தவர்களை சும்மா விடாத தலைவர்
தன்னுடன் இருந்தவர்கள் தவறு செய்தபோதெல்லாம் அதையெல்லாம் தட்டிக் கேட்கத் தயங்காத தலைவர் நீங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை என்பதையும் உறுதிபட நிரூபித்தவர்கள் நீங்கள்
ஆனால் நீங்களே தவறு செய்தபோது
ஆனால் இப்போது நீங்களே தவறு செய்துள்ளதாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளீர்கள். நமது கட்சியின் விதிப்படி யாரும் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள்.
தார்மீகப் பொறுப்பேற்று
எனவே நீங்கள் உங்களது தவறுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று கட்சிப் பதவியிலிருந்து விலக வேண்டும். சுப்ரீம் கோர்ட் உங்களை நிரபராதி என்று அறிவிக்கும் வரை பொறுப்பில் நீடிக்கக் கூடாது.
மனசாட்சியைக் கேளுங்கள்
அப்படிப்பட்ட முடிவை எடுக்கலாமா என்று உங்களது மனசாட்சியிடமே கேளுங்கள்.
மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்
நீங்கள் அப்படிச் செய்தால் நிச்சயம் மக்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கவே செய்யும். மேலும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் மத்தியிலும் நீங்கள் ஒரு தலைசிறந்த முன்னுதாரணமாக மாற முடியும்.
கட்சி உங்களை விட்டுப் போகாது
நீங்கள் இப்படிச் செய்வதால் கட்சி உங்களை விட்டு விலகாது. மாறாக கட்சியில் உங்களது செல்வாக்கு மேலும் அதிகரிக்கவே செய்யும்.
பிற ஊழல் தலைவர்களுக்கு நெருக்கடி தரும்
மேலும் உங்களது முடிவு ஊழல் செய்துள்ள பிற தலைவர்களுக்கும் நெருக்கடி தரும். அவர்களும் உங்களைப் பின்பற்றி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.
உங்களுக்குப் பதில் இன்னொரு பெண்
உங்களுக்குப் பதில் இன்னொரு தலைவரை, ஒரு பெண்ணையே பொதுச் செயலாளராக நீங்கள் நியமிக்கலாம்.
புது சக்தியுடன் திரும்பி வாருங்கள்
பதவியில் இல்லாத சமயத்தில் உங்களை நீங்களே சுய ஆய்வு செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். யாரெல்லாம் உங்களுக்குத் துரோகம் செய்தார்கள் என்பதை சிந்திக்க வாய்ப்பு கிடைக்கும். புது சக்தியுடன் நீங்கள் திரும்பி வரவும் முடியும்.
அதிமுகவினரின் போராட்டம் தவறு
உங்களது கைதுக்குப் பின்னர் அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களால் மக்களிடையே அதிமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. கட்சியின் பெயர் கெட்டு வருகிறது. நடுநிலை மக்களின் ஆதரவை நாம் இழந்து வருகிறோம்.
உங்களது பெயர் கெடும்
இத்தகைய விரும்பத்தகாத போராட்டங்களால் கட்சிக்கும், அரசுக்கும், உங்களுக்கும் கெட்ட பெயர்தான் ஏற்படுகிறது.
இது எனது கருத்துதான்
நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எனது கருத்து மட்டுமே. யோசனை அல்ல. உங்களைக் கேள்வி கேட்கவோ, யோசனை சொல்லவோ எனக்கு அதிகாரம் கிடையாது.
என் மீது நடவடிக்கை வரலாம்
இப்படி நான் கூறுவதால் என் மீது ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஆனால் அப்படிப்பட்ட நடவடிக்கையில் நீங்கள் இறங்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது கருத்தை வைக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமசுப்பிரமணியன்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்
இந்த ராமசுப்பிரமணியம், 2010ம் ஆண்டுதான் அதிமுகவுக்கே வந்து சேர்ந்தவர் ஆவார். அதற்கு முன்பு இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர் ஆவார்.