ஓ.பி.எஸ், நத்தம் உட்பட 233 அதிமுக வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மட்டும் தனது வேட்புமனுவை கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்த நிலையில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இன்று மொத்தமாக ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினார்.
இதன்பின், விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் மற்ற வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மதுரையில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வேட்பாளர்களுடன் சேர்த்து இதுவரை 233 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் அறிமுகம் முடிந்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வியாழக்கிழமையான இன்று, வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மேலிட உத்தரவின்பேரில், பகல் 1 மணிக்கு அவர்கள், தங்களின் தொகுதிகளில், மனு தாக்கல் செய்தனர்.
227 தொகுதிகளில் அதிமுகவும் எஞ்சிய 7 தொகுதிகளில் சரத்குமார், கருணாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் போட்டியிடுகிறார்கள். இதில் ஜெயலலிதா தவிர்த்த 233 வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
போடி தொகுதியில் பன்னீர்செல்வம், ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், ஆலந்தூர் தொகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா நகர் தொகுதியில் கோகுல இந்திரா, ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம், ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி உள்ளிட்ட அதிமுகவின் பல அமைச்சர்களும், முக்கிய புள்ளிகளும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சரத்குமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி ராதிகாவுடன் வந்து மனுத் தாக்கல் செய்தார்.
வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜான்சனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.