அதிமுகவின் அதிரடி நீக்கம் ஆபரேஷன் - விரக்தியில் தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள்
தினகரன் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கப்படுவதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கடும் விரக்தியில் உள்ளனராம்.
சென்னை: அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் கூண்டோடு நீக்கப்பட்டு வருவதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பலரும் விரக்தியடைந்து புலம்பி வருகின்றனராம்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும்.' தினகரன் அணியில் இருந்து வருவதற்கு வாய்ப்பு இருந்ததால்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தோம். இனி அவர்களுடன் பேசுவதற்கு முதல்வரும் துணை முதல்வரும் விரும்பவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவுக்கு எதிராகச் செயல்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கி வருகிறார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். வெற்றிவெல் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றனர்.

சின்னசாமிக்கு அதிர்ச்சி
சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன் உள்ளிட்டவர்கள், அ.தி.மு.கவின் அறிவிப்புக்கு எதிராகக் கொதித்தனர். ' அம்மாவால் பதவிக்கு வந்தவர்களை நீக்க மாட்டோம் எனக் கூறிவிட்டு, அவரது வார்த்தைக்கு விரோதமாகக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டனர். எங்களை யாரும் நீக்க முடியாது' எனப் பேட்டியளித்தனர். அ.தி.மு.க தொழிற்சங்க செயலாளராக இருந்த சின்னச்சாமியும் பதவியை விட்டுத் தூக்கப்பட்டார். 'காலையில் பன்னீர்செல்வத்துடன் நல்லபடியாகத்தான் பேசிக் கொண்டிருந்தேன். மாலையில் தொலைக்காட்சியில் அறிவிப்பு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை' என ஆதங்கப்பட்டார்.

உள்ளாட்சி தேர்தலுக்காக அதிரடி
"மாநிலம், மாவட்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் கட்சியை விட்டுக் கட்டம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியான வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். தினகரன் ஆட்களைக் கட்சியில் வைத்திருந்தால் உள்ளாட்சியிலும் உள்ளடிகளைச் செய்வார்கள் என்பதால்தான், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" எனத் தொடங்கிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், " ஆட்சிக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

தொண்டர்களை புறக்கணிக்க வேண்டாம்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 110 எம்.எல்.ஏக்களும் இந்த முடிவில் உறுதியாக உள்ளனர். இவர்கள் யாரும் தினகரன் பேச்சைக் கேட்டுச் செயல்படும் முடிவில் இல்லை. அவரவர் தொகுதிகளுக்கான பணிகளில் பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வமும், ' கட்சித் தொண்டர்கள் யார் வந்து கேட்டாலும் உதவிகளைச் செய்து கொடுங்கள். சில அமைச்சர்கள் அவர்களைப் புறக்கணிப்பதாகவும் செய்திகள் வருகிறது. இனி இதுபோன்ற செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார்.

விரக்தியில் மாஜி எம்.எல்.ஏக்கள்
இதையே முதல்வரும் வலியுறுத்தியிருக்கிறார். தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களில் பலரும் புலம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர். குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், சோளிங்கர் பார்த்திபன் ஆகியோர், ' தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் நம்மிடம் பேசுவதற்கு முதல்வர் தரப்பில் இருந்து வருவார்கள். அப்போது நமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்வோம்' என்ற முடிவில் இருந்தனர். இவர்களை முதல்வர் அலுவலகம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இதனால் வெறுத்துப் போன தினகரன் ஆட்கள், ' இனி நம்மோடு பேசுவதற்கு எடப்பாடி வர மாட்டார். பதவிக்காலத்தை பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டோம்' எனப் புலம்பி வருகின்றனர்.

ஜக்கையன் பாணியை பின்பற்றியிருக்கனும்
இவர்களுக்குப் பதில் அளித்த அமைச்சர் ஒருவர், ' ஓபிஎஸ்-க்கு பரம எதிரியாகப் பார்க்கப்பட்ட ஜக்கையனே, எடப்பாடி பக்கம் வந்துவிட்டார். அப்போதாவது இவர்கள் திருந்தியிருக்க வேண்டும். இன்னமும் தினகரன் காப்பாற்றுவார் என நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சி முடியும் வரையில் சட்டசபையில் தினகரன் மட்டுமே உட்கார்ந்திருக்கப் போகிறார். அவரை நம்பி வந்தவர்கள் தெருவில்தான் நிற்கப் போகிறார்கள். 18 பேருடனும் சமாதானத்துக்கு வாய்ப்பில்லை' என உறுதியாகக் கூறிவிட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டிருக்கிறார். ' அனைத்து மாநகராட்சிகளையும் அ.தி.மு.கவே கைப்பற்ற வேண்டும். தன்னுடைய தலைமையிலான அ.தி.மு.க வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது' என்பதை நிறுவ இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications