பரபரப்பான சூழலில் நாளை அதிமுக செயற்குழு- பொதுக் குழு!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களைகட்டி வரும் நிலையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம்.
அந்த வகையில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி வருகின்றன.
தே.மு.தி.க.
தே.மு.தி.க.வில் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை விட்டே விலகியதை தொடர்ந்து, அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது.கூட்டத்தில், கட்சியில் அவைத்தலைவர் பதவியையே நீக்க முடிவு செய்யப்பட்டதுடன், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அதிகாரமும் வழங்கப்பட்டது.
காங்கிரஸுடன் உறவை முறித்த திமுக
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 15-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறி வந்தாலும் பாஜகவுடன் அணி சேருமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி எதுவும் வைக்கப்படவில்லை.
நாளை அ.தி.மு.க.
இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
வியூகத்தை விளக்கும் ஜெ.
இக் கூட்டத்தில், தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா விளக்கி பேசுகிறார்.
ஜெ-க்கு அதிகாரம்?
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கவும், தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.