டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக எம்.பிக்கள்.. பிரணாப் முகர்ஜியை சந்திக்க திட்டம் !
அதிமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து சசிகலா பதவி ஏற்பு குறித்து வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமயைில் அதிமுக எம்.பி-க்கள் 20 பேர் கொண்ட குழு டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நேரில் சந்தித்து சசிகலா பதவி ஏற்பு குறித்து வலியுறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 131 அதிமுக எம்.எல்.ஏக்களும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 பேரும் பங்கேற்றனர். அப்போது சசிகலா முதல்வராக பதவி ஏற்பது தொடர்பாக எம்.எல்.க்களிடம் ஆதரவு கடிதம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவல்களும் வராத நிலையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். இதனால் ஜனாதிபயை சந்திக்க டெல்லி செல்ல இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் 20 அதிமுக எம்.பி.க்கள் டெல்லி சென்றுள்ளனர். இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சசிகலா தலைமையிலான புதிய ஆட்சியை அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரணாப் முகர்ஜிடம் வலியுறுத்த உள்ளனர்.