காவிரி பிரச்சினைக்காக அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா இல்லை: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
கோவை: காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. வெவ்வேறு காரணங்களை கூறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்க பார்க்கிறது.
எனவே மத்திய அ்ரசின் கவனத்தை ஈர்க்க, தமிழக எம்.பிக்கள் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தகார். நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று பாமக எம்.பியான அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கூட, எம்.பிக்கள் ராஜினாமா கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம்
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்யபோவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியுள்ளது. டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நமது நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம்.
வழக்கறிஞர்கள் பங்களிப்பு
காவிரி வழக்கில் நமது வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடினர், முழுமையாக வாதங்களை எடுத்து வைத்தோம். அரசியல் காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் வாதம் பற்றி வைகோ குறை கூறுகிறார். 13 நாட்கள் காவிரி தொடர்பாக வாதத்தை நமது வழக்கறிஞர்கள் சிறப்பாக முன் வைத்தனர்.
அரசிதழில் தீர்ப்பு
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் தமிழகம் உறுதியாக உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் குரல் கொடுக்கிறார்கள். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான்.
திமுக எதையும் செய்யவில்லை
காவிரி விவகாரத்தில் திமுக எதையும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியிலும், மாநிலத்தில் தங்கள் ஆட்சியும் இருந்தபோது, அதை பயன்படுத்தி காவிரி விவகாரத்தில் திமுக தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இப்போது அதிமுக எம்.பிக்களை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துவது அரசியலுக்காகத்தான்.
அதிகாரம் இல்லாவிட்டால் பலனில்லை
அதிகாரம் உள்ளபோதுதான், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நன்மை செய்ய முடியும், இல்லாத போது செய்ய முடியாது. எம்.பிக்கள் இருப்பதால்தான் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த முடிகிறது. ராஜினாமா செய்வதால் பலன் இல்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதன் மூலம், காவிரி பிரச்சினைக்காக அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.