திருச்சி காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல்: எம்.பி.குமார் உள்ளிட்ட 170 அதிமுகவினர் கைது
திருச்சி: திருச்சியில், காங்கிரஸ் அலுவலகம் மீது கற்கள், உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்குதல் நடத்திய எம்.பி. குமார் உள்ளிட்ட 170 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து கொச்சைப்படுத்தி பேசிய கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று திருச்சி மெயின்கார்டு கேட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அங்கு துணை போலீஸ் கமிஷனர் சரோஜ்குமார் டாகூர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
குமார் எம்.பி தலைமையில்
மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், எம்.பி.யுமான குமார் தலைமையில் துணை மேயர் சீனிவாசன் உட்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அருணாசல மன்றத்தை நோக்கி இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஆவேசமாக வந்தனர்.
தடுத்த போலீசார்
போக்குவரத்து நிறைந்த இந்த பகுதிகளில் அதிமுகவினர் சிலர் தடிகளையும், கற்களையும் எடுத்துக்கொண்டு ஆவேசமாக வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இருபிரிவாக வந்த அதிமுகவினரும் அருணாசல மன்ற வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர். வளாகத்தின் வெளிகேட்டை பூட்டி அங்கு தயாராக நின்றிருந்த போலீசார் அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அடித்து நொறுக்கிய அதிமுகவினர்
அப்போது அதிமுகவினர் அருணாசல மன்றம் மீது சரமாரியாக கற்களை வீசினர். சிலர் இரும்பு தடி, உருட்டு கட்டை, செருப்புகளை வீசினர். இதில் கட்டிடத்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறின. வாசலில் இருந்த பிளக்ஸ் போர்டுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காமராஜர் சிலைக்கு அவமரியாதை
அதிமுகவினர் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது முட்டை, தக்காளி, செருப்பு போன்றவற்றை வீசினர். அப்போது வளாகத்தில் இருந்த காமராஜர் சிலை மீதும் செருப்பு, முட்டை, தக்காளி வீசப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினர் தாக்கியதை கண்டித்து காங்கிரசார் சிலர் அருணாசலம் மன்றம் முன் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
170 அதிமுகவினர் கைது
இதையடுத்து எம்பி குமார், 8 பெண்கள் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தேவர்ஹாலுக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சி.பாபு கோட்டை போலீசில் புகார் மனு அளித்தார். அதில், எம்பி குமார் தலைமையில் வந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் தாக்கியதில் காங்கிரஸ் அலுவலகத்துக்கு சொந்தமான ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.