அலங்காநல்லூரில் முன்னெச்சரிக்கை கைது மட்டுமே- மாணவர்கள் விடுதலை உறுதி- எஸ்.பி. விஜயேந்திர பிதாரி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி அலங்காநல்லூரில் 21 மணிநேரம் போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என மதுரை எஸ்பி விஜயேந்திரா பிதாரி உறுதியளித்துள்ளார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. 21 மணிநேரத்திற்கு மேல் போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி,
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என்றும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் எஸ்.பி உறுதியளித்தார். அமைதியான போராட்டத்திற்கு போலீஸ் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் விஜயேந்திர பிதாரி கூறினார். ஆனால் மாவட்ட எஸ்.பி.யின் சமாதான பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications