பானு, மம்முட்டி ரெடியா.. வாங்க ராத்திரி 9 மணியிலிருந்து காலைல 7 மணி வரைக்கும் விடாம பேசலாம்!
சென்னை: ஒரு காலத்தில் போனை எடுத்தால் மக்கள் காதை விட்டு எடுக்காமல் கலகலப்பாக பேசிக் கொண்டே இருப்பார்கள் மணிக்கணக்கில். அதை வைத்துத்தான் அழகன் படத்தில் ஒரு சூப்பர் பாட்டையே வைத்தார் கே.பாலச்சந்தர். அதன் பிறகுதான் 3 நிமிடங்கள் வரை ஒரு கால் என்று ஸ்பீடு பிரேக்கை கொண்டு வந்தது பி.எஸ்.என்.எல். தற்போது மீண்டும் அந்தப் பழைய பாதைக்கு அது திரும்பப் போகிறது.
ஆமாம், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசிக் கொள்ளும் புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.
மனிதர்களின் ஆறாம் விரலாய் மாறிப் போன செல்போனால், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும், நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது.
வாட்ஸ் அப் வசதியால்...
போன் வந்தப் பிறகு, கடிதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது போல், தற்போது வாட்ஸ் அப், இமெயில், செல்போன் உள்ளிட்ட வசதிகளால் போனில் பேசிக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்றால் மிகையில்லை.
மதிப்பு குறைந்து விட்டது...
எனவே, கட்டணத்தில் அதிக சலுகைகளை தந்து தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன செல்போன் நிறுவனங்கள். ஆனால், இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சாதாரண டெலிபோன் (தரைவழி)களுக்கு மதிப்பு குறைந்து விட்டது.
கடும் போட்டி...
இதனால், தொலை தொடர்புத்துறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு போட்டியாக பல தனியார் நிறுவனங்களும் களம் இறங்கியதால் கடுமையான போட்டி ஏற்பட்டது.
டெலிபோன் இணைப்புகள் சரண்டர்...
நாடு முழுவதும் லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள் கடந்த 10 வருடத்தில் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் 2 கோடியே 80 லட்சம் தரைவழி டெலிபோன்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 13 லட்சத்து 60 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன்கள் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் டெலிபோன் சரண்டர் அதிகரித்து வருகிறது.
புதிய திட்டம்...
இண்டர்நெட் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு மட்டுமே பி.எஸ்.என்.எஸ்.எல். அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, டெலிபோன் சரண்டர்களைத் தடுக்கும் வகையில் ஒரு அதிரடி திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மே 1ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை வாடிக்கையாளர்கள் இலவசமாக பேசிக் கொள்ளும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
இலவச அழைப்புகள்...
இது தரைவழி போனில் இருந்து பி.எஸ்.என்.எல். செல்போன், தரைவழி போன் மற்ற தனியார் நிறுவனங்களின் செல்போன், தரைவழி போன்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக பேசலாம்.
இதன் மூலம் தற்போது உள்ள டெலிபோன் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதோடு மட்டுமின்றி புதிதாக வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மே 1ம் தேதி முதல்...
இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த சலுகை திட்டம் மே 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. தற்போது உள்ள அனைத்து தரைவழி சந்தா தாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்-க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திட்டம் பி.எஸ்.என்.எல்.க்கு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும் என்று நம்புகிறோம்' என்கிறார்.