ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தை படம்பிடித்த வார இதழ் போட்டோகிராபர் மீது போலீஸ் தாக்குதல்
சென்னை: சென்னை, தீவுத் திடலில் நேற்று மாலை நடைபெற்ற ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்தில் ஆனந்த விகடன் போட்டோகிராஃபர், மீ.நிவேதன் போலீஸ் அதிகாரியால் தாக்கப்பட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நேற்று மாலை சென்னை தீவுத் திடலில் பிரசாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
நிகழ்ச்சியின்போது, ஆனந்த விகடனின் போட்டோகிராஃபர் மீ.நிவேதன் தொண்டர்கள் அமர்ந்திருந்த பகுதியை பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது பாஸ்கர் என்ற போலீஸ் அதிகாரி வந்து, "காலி நாற்காலிகளை படம் எடுக்குறீயா? எந்த பத்திரிகை? உங்களுக்கு இதுதான் வேலையா? நக்ஸலைட் கேஸ்ல உள்ள தூக்கி போட்ருவேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடன் இருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் நிவேதனை தாக்கியதோடு அவரின் கேமரா, செல்போன், பர்ஸ், கேமரா பேக் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த விலை உயர்ந்த கேமராவை அதிமுக தொண்டர்களிடம்கொடுத்து, சோதனை செய்ய சொல்லியுள்ளார் பாஸ்கர். கேமராவில் இருந்த சிப்பை அதிமுகவினர் வெளியே எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு 30 நிமிடங்களாக போலீசார், நிவேதனை மிரட்டிக்கொண்டு இருந்தனர்.
இதை அறிந்ததும், பிற பத்திரிகைகளை சேர்ந்த நிருபர்களும், புகைப்படகலைஞர்களும் அங்கு விரைந்துள்ளனர். இதை பார்த்ததும், நைசாக ‘நிவேதனை தாக்க வந்த கட்சியினரிடம் இருந்து நாங்கள்தான் காப்பாற்றினோம்' என்று போலீசார் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
நிவேதன் தாக்கப்பட்டது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை வட்டாரங்கள் கூறுகின்றன.