20 தமிழர்கள் சுட்டுக்கொலை எதிரொலி: தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்
தூத்துக்குடி: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆந்திர மாநில அரசு கட்டிடங்கள் தாக்குதலுககு ஆளாகி வருகின்றன.
ஆந்திராவில் போலீசார் என்கவுன்ட்டர் என்ற பெயரில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள ஆந்திரா வங்கி முன்பு வழக்கறிஞர்கள் திரண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் ஆந்திர அரசையும், காவல் துறையையும் கண்டித்து சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை அவர்கள் தீ வைத்து எரித்தனர். ஆந்திர வங்கி மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பிரபு, ரகுராம், இன்னோஷியஸ், ஜோதிராஜா, அசோக், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ரேணியல் ஜேசுபாதம் தலைமையிலான போலீசார் இரு பெண் வழக்கறிஞர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் மாலை ஆந்திரா வங்கி ஏடிஎம்முக்கு தீ வைக்க முயன்றதாக வழக்கறிஞர்கள் ரசல், ஸ்டீபன், ஆகியோரை மத்திய பாகம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சங்கர் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்களுக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications