ஆந்திர துப்பாக்கிச் சூடு எதிரொலி: டோல்கேட்டில் பணிபுரியும் ஆந்திர தொழிலாளர்கள் வெளியேற்றம்
விழுப்புரம்: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உளூந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி புரியும் ஆந்திர மாநில ஊழியர்களை வெளியேறச் சொல்லி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 20 தமிழக தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர போலீசாரின் இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றம் நிலவுகிறது. தமிழகத்தில் இருந்து புறப்பட இருந்த ஆந்திர மாநில பேருந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஆந்திர மாநில ஊழியர்களை வெளியேறச் சொல்லி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பின்னர், ஆந்திர மாநில ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறுவதாக சொன்னதை அடுத்து போராட்டக்காரர்கள் முற்றுகையை கைவிட்டனர்.