ஆடி அமாவாசை: மேல்மலையனூர் அங்காளம்மனை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்
ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தைக்காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
விழுப்புரம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறும்.
ஆடிஅமாவாசை, தை, மாசி, அமாவாசை விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். நேற்றைய தினம் விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்
உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார். இரவு 11.25 மணிக்கு அங்கிருந்த அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.

பக்தர்கள் வெள்ளம்
அங்கு பூசாரிகள் பக்திப்பாடல்கள் பாடினர். அப்போது பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். விழாவில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்ததால் அவர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சனிக்கிழமை காலையிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலான.பக்தர்கள் தாடை மற்றும் நாக்குகளில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சிறப்பு பேருந்துகள்
விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பெங்களூர், புதுச்சேரியில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications