செந்தில் பாலாஜி ரெய்டு நடக்கும் அதே நாள்! அண்ணாமலைக்கு செக்! ஆருத்ராவில் ட்விஸ்ட்! ஆசியம்மாள் அதிரடி
சென்னை: ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் உள்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி அளித்துள்ளார். ஆருத்ரா வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரிய ரெய்டுகளில் ஒன்றாக செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டு பார்க்கப்படுகிறது. மொத்தம் 1000 அதிகாரிகள் இந்த ரெய்டில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுக்க 200க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.
செந்தில் பாலாஜி வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்துள்ள போஸ்டில், வேலை வாய்ப்பு ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு ஆதரவாக ஒரு கும்பல் ஐடி அதிகாரிகளை தாக்கி உள்ளனர்.
அவர்களின் வாகனங்களை திமுக குண்டர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது போன்ற தவறான விஷயங்களில், உங்கள் கட்சி ஆட்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் கட்சி ஆட்களுக்கு ஒழுங்காக சொல்லி வையுங்கள். நீங்கள் ஆட்சி நடத்துவது ஒன்றும் 60 களில் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் அண்ணாமலை பெயர் அடிபட்டு வரும் ஆருத்ரா மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கைகள் இன்று எடுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் கிளை பொறுப்பாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிஜாவு வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளான ஆருத்ரா கோல்ட் டிரேடிங், ஹிஜாவு அசோசியேட்ஸ், LNS - IFS, AMRO KINGS, CVRS நிதி நிறுவனங்கள் மோசடிகள் மீதான புலன் விசாரணைகளில் முன்னேற்றம ஏற்பட்டு உள்ளது.
ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எல்.என்.எஸ் நிறுவன மோசடி தொடர்பாக 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ₹9.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி அளித்துள்ளார்.
ஆருத்ரா வழக்கு: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆருத்ரா ஹாரிஸ்தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் இந்த மோசடி குறித்து இதுவரை நேரடியாக பேசாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், முதல் முறையாக நேரடியாக கருத்து சொன்னார். இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேரடியாக பேசினார். அதில், மக்களிடம் அதிகம் வட்டி.. அதாவது 23 முதல் 30 சதவிகிதம் மாத வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்று உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேரிடம் இவர்கள் முதலீட்டை பெற்று உள்ளனர்.
இதில் கிட்டத்தட்ட 243 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்று , அதை திருப்பியும் தராமல் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக பலர் புகார்களை அளித்துள்ளனர். அந்த புகார்கள் மீது குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் 22 பேருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறோம். 11 பேர் இதில் ஏஜெண்டுகள் என்று பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுவரை வங்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இவர்களின் 6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இதில்தான் 2 வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் வெளிநாடு தப்பி ஓடிச்சென்ற ராஜசேகர், ஷாராணி ஆகியோர் ரெட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
யார் ஆசியம்மாள்: தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறையில் டிஐஜியாக இருந்தவர் ஐஜியாக பதவி உயர்வு கடந்த வருடம் பெற்றார். தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் இது முக்கியமான சாதனையாக பார்க்கப்பட்டது. உளவுத்துறையில் டிஐஜியாக முதல்முறை பொறுப்பேற்றவரும் இவர்தான்.
இப்போது அதே பிரிவில் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் போலீஸ் அதிகாரியும் இவர்தான். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசியம்மாள். நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்டவர். அதேபோல் தனது துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்க கூடியவர். தூத்துக்குடியில் கொங்கராயக் குறிச்சி என்ற கிராமத்தில் போதிய வசதிகள் இன்றி படித்து வளர்ந்தவர்.
குடும்பத்தில் நிறைய கஷ்டங்கள் இருந்தும், அதற்கு இடையிலும் கல்வி ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு தொடர்ந்து பல்வேறு பட்டங்களை இவர் படித்து முடித்தார். எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ ஆகிய பட்டங்களை பெற்றவர், வேறு பணிகளில் கவனம் செலுத்தாமல் குரூப்-1 தேர்வுகளை எழுதுவதில் கவனம் செலுத்தினார். இதில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பணியமர்த்தப்பட்டார். அதன்பின் பல்வேறு துறைகளுக்கு இவர் மாற்றப்பட்டார்.
இவரின் நேர்மை மற்றும் பணித்திறன் காரணமாக வேகமாக இவருக்கு புரொமோஷன்களும் வழங்கப்பட்டது. முதலில் வரதட்சணைக் கொடுமைத் தடுப்புப்பிரிவில் டிஎஸ்பியாக இருந்தார். பின்னர் மகாபலிபுரத்தில் டிஎஸ்பி, அதன்பின் சென்னையில் பல்வேறு இடங்களில் உதவி ஆணையர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசியல் சார்பற்று இருந்த காரணத்தால் தொடர்ச்சியாக இவருக்கு புரொமோஷன்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஆருத்ரா வழக்கில் இவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.