ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயருகிறது? நிர்வாகம் பரிந்துரை!
சென்னை: ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்த நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
ஆவின் பால் விலை, தனியார் பால் விலையைவிட குறைவாகவும் தரமாகவும் இருப்பதால் சென்னை மற்றும் புறநகரில் தினமும் 11.5 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 7 லட்சம் லிட்டர் மாதாந்திர பால் அட்டைகள் மூலமும் 4.5 லட்சம் லிட்டர் மொத்த வினியோகஸ்தர்கள் மூலமும் வினியோகம் செய்யப்படுகின்றன.
தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களில் 4 முறை பால் விற்பனை விலையை உயர்த்தி உள்ளன. ஆனால், ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை உயர்த்திய போதிலும் விற்பனை விலையை கூட்டாமல் இருப்பதால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
லிட்டருக்கு ரூ.6 உயரும்
இந்நிலையில், பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தவும், பசும்பால், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தவும் ஆவின் நிர்வாகம் அரசின் தலைமை செயலாளருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது.
ஆவின்பால் விலை குறைவு
இது குறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''தனியார் பாலைவிட ஆவின் பால் லிட்டருக்கு 11 ரூபாய் வரை குறைவாக விற்கப்படுகிறது.
ரூ.2.25 கோடி நஷ்டம்
இதனால், ஆவின் நிர்வாகத்துக்கு மாதத்துக்கு 2.25 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை ஈடு செய்யவும், பால் உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையை கருத்தில் கொண்டும், பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் வரையும், கொள்முதல் விலையை 1 ரூபாய் உயர்த்தி நிர்ணயம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
நுகர்வோர்கள் கலக்கம்
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்கட்டணம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த நிலையில் பால்விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.