டிராக் மாறி ஓடிய சென்ட்ரல்-அரக்கோணம் விரைவு ரயில்.. பீதியில் அலறிய பயணிகள்
சென்னை: சென்னை சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்கள் தடம் மாறி சென்றதால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு மின்சார ரயில் நேற்று இரவு வழக்கம்போல் புறப்பட்டது. அடுத்த ரயில் நிலையமான பேசின்பாலத்துக்கு சென்றபோது அரக்கோணம் செல்லும் பாதைக்கான 1வது நடைமேடையில் செல்லாமல் கும்மிடிப்பூண்டி செல்லும் பாதைக்கான 6வது நடைமேடைக்கு சென்றது.

இதை கண்ட பயணிகள் பெரும் பீதி அடைந்தனர். ரயில் பாதை மாறி செல்வதை உணர்ந்தும், சிக்னல் அந்த பக்கமாக விழுந்ததால் வேறு வழியின்றி டிரைவர் ரயிலை 6வது நடைமேடைக்கு இயக்கினார். ரயில் நின்றதும் பயணிகள் ஓடிச்சென்று அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் முறையிட்டனர். இதனால் பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள், சிக்னல் கோளாறு இருந்ததை கண்டுபிடித்தனர். ரயில் நிலையத்தில் நிறுத்தும் சமயம் என்பதால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. ரயில் சென்று கொண்டிருக்கும்போது இதுபோன்று சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒருவேளை கும்மிடிப்பூண்டிக்கு செல்ல வேண்டிய ரயில் அந்த சமயத்தில் அங்கு சென்றிருந்தாலும் விபத்து ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக உடனடியாக சிக்னல் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், இரவு 8 மணிக்கு சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மற்றொரு விரைவு ரயில் 8.10 மணி அளவில் பேசின்பாலம் ரயில் நிலையம் வந்தது. பாதை மாறி சென்ற ரயிலில் இருந்த பயணிகள் 8 மணி ரயிலில் ஏற்றுவிடப்பட்டனர்.
பாதை மாறி சென்ற விரைவு ரயில் இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications