தொடர் மின்வெட்டு.. தூக்கத்தை தொலைத்த மக்கள்.. ஆரணி மின் வாரிய அலுவலகத்தின் மீது கல்வீச்சு!
ஆரணி: ஆரணி பகுதியில் தொடரும் மின்வெட்டு காரணமாக மின்சார அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல் நிலையத்தில் மின் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதால் மக்கள் தூக்கமின்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
அந்த தீர்மானத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த 2 மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரை தொடர்ந்து.. ஆரணி பேரூராட்சியில் 3 பெண் கவுன்சிலர்கள் கடத்தல்.. குழந்தையுடன் கணவர் தர்ணா
மத்திய அரசு
மத்திய அரசு கடைசியாக நாளொன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே அளித்தது. தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது. தமிழகத்தில் போதுமான நிலக்கரி இல்லாத போதிலும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
ஆரணியில் தொடர் மின்வெட்டு
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கண்ணமங்கலம், களம்பூர், சந்தவாசல், படவேடு, தேவிகாபுரம், விண்ணமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து 2 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
2 நாட்களாக ஆரணியில் மின்வெட்டு
மின்சாரம் மணிக்கணக்கில் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொது மக்களும் விவசாயிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலும் இரவு நேரத்தில் எந்த அறிவிப்புமின்றி மின்சாரம் நிறுத்தப்படுவதால் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
ஆரணி மின்வாரிய அலுவலகத்தின் மீது கல்வீச்சு
இதனால் விரக்தி அடைந்த ஆரணி பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மின்சார அலுவலகம் மற்றும் மின்பாதை மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மீது நேற்று இரவு கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மின்சார அலுவலக ஊழியர்கள், மின் அலுவலகத்தின் கதவை பூட்டி ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
போலீஸில் புகார்
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் பாதுகாப்புக்காக சென்று விசாரணை செய்துள்ளனர். ஆரணி மின்சார உதவி செயற்பொறியாளர் தரப்பில், ஆரணி மின்சார அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதால் மின்சார அலுவலகத்திற்கும் மின் மாற்றி மின் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு வழங்கவும் என ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.