அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு: போலி குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்
வேலூர்: அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
வேலூரை சேர்ந்த பா.ஜனதா மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அரவிந்த் ரெட்டியை கூலி படையினர் கொலை செய்ததாகவும், கூலிபடை யினர் வசூர்ராஜா, தங்கராஜ், பிச்சைபெருமாள் உள்பட 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் பரபரப்பு பேட்டியும் அளித்தனர்.
இந்த நிலையில் சென்னை, புத்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகள் பிலால்மாலிக், போலீஸ்பக்ருதீன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நடத்திய விசாரணை யில் அரவிந்த்ரெட்டியை தீவிரவாதிகள் கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தொடக்கத்தில் இருந்து விசாரித்தனர். இந்த வழக்கில் கைதான கூலிப்படையினர் போலி குற்றவாளிகள் என்பது உறுதியானது.
எனவே கூலிப்படையினரைக் கைது செய்த. டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தெற்கு மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் விசாரணை நடத்திய வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் ஆதாரங்கள் ஏதாவது சிக்கியதா? கூலிபடையினரை கைது செய்ய என்ன காரணம் என்பது குறித்து விசாரித்தனர். மேலும் போலியாக கைது செய்யபட்ட கூலிபடையினரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு மனுதாக்கல் செய்துள்ளனர்.