ஜெயலலிதா மர்ம மரணம்- 15 பேருக்கு நீதிபதி ஆறுமுகசாமி நோட்டீஸ்- விசாரணை தாமதம்?
ஜெயலலிதா மர்ம மரண வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, இது குறித்து 15 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு 15 பேருக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விசாரணை தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
போயஸ் கார்டனில் இருந்து இன்று விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பட்டுள்ள 15 பேரும் விளக்கம் அளித்த பின்னரே விசாரணை முறைப்படி தொடங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது கோவையில் உள்ள நீதியரசர் ஆறுமுகசாமி, புதன்கிழமையன்றே சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணைக்கமிஷனின் விசாரணை ஏற்கனவே காலதாமதமாகியுள்ள நிலையில் மீண்டும் விசாரணை தாமதமாகும் என்று தெரிகிறது.
கால தாமதமாகத் தொடங்கப்படும் விசாரணை ஆணையத்தால், குறிப்பிட்ட டிசம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.