சூலூர் புதிய பஸ் நிலைய கட்டிட பணியின்போது குபீர் நீரூற்று.. அதிர்ச்சியில் மக்கள்!
பேருந்து நிலைய கட்டி பணிக்காக தோண்டும்போது தண்ணீர் ஊற்றுபோல் பெருகி வருவது அதிர்ச்சியளித்துள்ளது.
கோவை: சூலூரில் பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் ஊற்றாக தண்ணீர் நிறைந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில் உள்ள சோமனூர் பகுதியில் கடந்த ஆண்டு பேருந்து நிலைய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை யாராலும் மறக்க முடியாது. பலரும் அந்த விபத்தில் இருந்து மீள முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
அதே போன்ற சம்பவம் மீண்டும் வரவாய்ப்பு உள்ளதோ என்ற அச்சத்துடன் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
இடிக்கப்படாத கட்டிடம்
சூலூர் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் கட்டிடம் முற்றிலும் பழமையானதால் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சூலூர் பேரூராட்சி உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடத்தை இடிக்காமல் உள்ளனர். இந்நிலையில் அதன் அருகிலேயே புதிய பேருந்து நிலையத்தை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பெரும் தண்ணீர் ஊற்று
கட்டிடம் கட்டும் இடம் , பல ஆண்டுகளுக்கு முன்னர் கல்லுக்குழியாக இருந்து வந்தது. பின்னர் நாளடைவில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணியின்போது சில அடியிலேயே ஊற்றாக தண்ணீர் வருகிறது. இதனால் இந்த இடத்தின் மீது கட்டிடம் கட்டினால் , கட்டிடம் உறுதி தன்மையற்றே காணப்படும் என இப்பகுதிமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
அதிர்ச்சியளிக்கும் அறிக்கை
தொடர்ந்து பலரும் இந்த இடத்தில் , பேருந்து நிலைய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இங்கு மண் பரிசோதனை செய்ய பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்து , கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வல்லுனர்கள் மண் பரிசோதனை செய்தனர். ஆனால் அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடிய தகவல்களே கிடைத்து உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் அளித்த அறிக்கையில் , தற்போது தேர்ந்தெடுத்து உள்ள இடம் கட்டிடம் கட்டுவதற்கு தகுதியான இடம் இல்லை எனவும், வேறு இடத்தை தேர்வு செய்யுமாறும் தெரிவித்து உள்ளனர்.
பணிகளை நிறுத்த கோரிக்கை
ஆனால் அதனையும் மீறி தற்போது கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, உறுதி தன்மையுடன் கட்டிடம் காட்டப்படும் என தெரிவித்து உள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இடம் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி இந்த பணிகளை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.