என்கவுண்டர்ல போடப்போறாங்க… அட்டாக் பாண்டி மனைவியின் அவசர ஆட்கொணர்வு மனு
மதுரை: என் கணவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுவிடும் ஆபத்து உள்ளதால் அவரை உடனடியாக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி பொட்டு சுரேஷ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அட்டாக் பாண்டியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் பொட்டு சுரேஷ். மத்திய அமைச்சராகவும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க.அழகிரியின் வலதுகரமாக இருந்தவர். 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அடக்கி வாசித்த பொட்டு சுரேஷ், கடந்த 2013 ஜனவரி 31ம் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகரும், அழகிரியின் ஆதரவாளருமான அட்டாக்பாண்டி உள்ளிட்ட 14 பேரை தேடினர். இதில் 7 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். மேலும் 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
வழக்கில் முதல் குற்றவாளியாக கூறப்பட்ட அட்டாக் பாண்டி மட்டும் தலைமறைவானார். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி பிடிபட்டால் திமுக முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இருக்குமிடம் தெரியாமல் போலீஸார் தேடிவந்தனர்.
சமீபத்தில் வாரப் பத்திரிகையில் அவரது பேட்டி வெளியானது. இதையடுத்து அவரைத் தேடும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். நண்பர்களுடன் அவர் தொடர்புகொள்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து மும்பையில் அவர் இருப்பதும் தெரியவந்தது. மதுரை தனிப்படையினர் மகாராஷ்டிர மாநிலம் புனே அருகேயுள்ள வாஸி எனுமிடத்திற்குச் சென்று அட்டாக் பாண்டியை நேற்று கைது செய்தனர். விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் அட்டாக் பாண்டி.
மனைவியின் அச்சம்
அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்ட சிலமணி நேரங்களிலேயே அவரது மனைவி தயாளு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், நிலப்பறிப்பு வழக்கு சம்பந்தமாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் என் கணவரை போலீசார் தொந்தரவு செய்தனர். இதன்காரணமாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். 2013 ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் என் கணவரை குற்றவாளியாக போலீசார் சேர்த்தனர். இதைதொடர்ந்து, போலீசார் தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டுக்கு வராமல் தலைமறைவாகினார்.
போலீஸ் மிரட்டல்
போலீசார் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் என் வீட்டுக்கு வந்து, என் கணவரை ஒப்படைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும், நாங்களாக பிடித்தால் என்கவுண்டர் செய்து விடுவோம் என்றும் மிரட்டினர். அவரை பிடிக்க முடியாததால் என் மீதும், என் தந்தை மீதும் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். என் கணவரை கைது செய்தது தொடர்பாக போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கணவருக்கு பாதுகாப்பு
என் கணவர் சார்ந்துள்ள கட்சியை சேர்ந்தவர்களுக்கு பொட்டுசுரேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாக மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவும், அவர்களைக் கொலை வழக்கில் சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி வாக்குமூலம் அளிக்க என் கணவர் மறுக்கும் பட்சத்தில் அவரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, என் கணவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மராட்டிய மாநில டி.ஜி.பி., தமிழக டி.ஜி.பி., மதுரை மாநகர் காவல் ஆணையர் ஆகியோருக்கு அவசர மனு அனுப்பி உள்ளேன்.
சித்ரவதை செய்யக்கூடாது
மதுரை நீதிமன்றத்தில் என் கணவரை ஆஜர்படுத்தும்வரை அவரை எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது என்றும், சித்ரவதை செய்யக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். அவரை, சட்டவிரோத காவலில் போலீசார் வைத்துள்ளதால் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
அட்டாக் அடைமொழி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர், பாண்டி, 42. இவரது குடும்பம், 30 ஆண்டுகளுக்கு முன், மதுரை கீரைத்துரையில் குடியேறியது. துவக்கத்தில், மாநகராட்சி கழிப்பறைகளை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்தார். கபடி வீரரான பாண்டி, 'அட்டாக்' எனக்கூறி, எதிராளியை தோல்வி அடையச் செய்வதில் கில்லாடி; இதனால், பெயருடன், 'அட்டாக்' ஒட்டிக்கொண்டது. இதற்கேற்ப, சில ஆண்டு களாக, 'அட்டாக்' ரக ஹேர் ஸ்டைலில் வலம் வந்தார்.