சீற காத்திருக்கும் காளைகள்... அடக்க துடிக்கும் 675 இளைஞர்கள்... நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
மதுரை: நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஏராளமான இளைஞர்கள் மாடுபிடிக்க பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
அவனியாபுரத்தில் 675 வீரர்களுக்கும், பாலமேட்டில் 1,188 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1241 வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதேபோல் அவனியாபுரத்தில் 954 காளைகளும், பாலமேட்டில் 1000 காளைகளும் பங்கேற்க உள்ளன. இன்று அலங்காநல்லூரில் காளைகளின் பதிவு நடைபெறுகிறது.
அவனியாபுரத்தில் நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. இதற்காக குருநாதசுவாமி கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் போட்டியை பார்ப்பதற்காக அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு தங்க காசு, தங்க சங்கிலி, பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு மாடுபிடி வீரர்கள், காளைகள், பொதுமக்கள் எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்தனர்.