எடப்பாடி பழனிசாமியின் மனசு இருக்கே.. அதிமுகவில் சேர்ந்தது ஏன்..? அய்யாதுரை பாண்டியன் பளிச் பதில்!
தென்காசி: திமுகவில் உண்மைக்கும், நேர்மைக்கும், உழைப்புக்கும், மரியாதை கிடைக்காது என அதிமுக பிரமுகரும், தொழிலதிபருமான அய்யாதுரை பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திமுக, அமமுக என பயணித்து அண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அவர் அதிமுகவில் இணைந்த நிலையில் அது குறித்து பேசுவதற்காக நாம் அவரை தொடர்பு கொண்டோம்.
அப்போது அவர் அளித்த பதில்களின் விவரம் வருமாறு;

1) திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிலிருந்த நீங்கள், அக்கட்சி ஆட்சி அமைக்கும் எனத் தெரிந்ததும் ஏன் விலகினீர்கள்?
நான் என் சுயநலம் கருதி அரசியலுக்கு வரவில்லை. எளிய, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வந்தேன். உண்மைக்கும், நேர்மைக்கும், உழைப்புக்கும், மரியாதை இல்லை. நினைத்ததை நிறைவேற்ற வழி இல்லை என்பதை அறிந்து விலகினேன்.
2) சட்டமன்றத் தேர்தலின் போது அமமுகவில் இணைந்து ஏன்?
அமமுகவிற்கு அடித்தளம் உள்ளது, கொஞ்சம் ஓட்டு வாங்கி உள்ளது, அத்தோடு எனக்கென்று ஒரு வாக்கு வங்கி உள்ளது, அத்துடன் அனுதாப ஓட்டுகளும் சேர்ந்து வெற்றியடைவேன் என நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது போல் அமமுகவிற்கு எந்த அடித்தளமும் இல்லை, அவர்களால் தான் நான் தோல்வியடைந்தேன். ஓட்டு வங்கியும் இல்லை.
3)டிடிவி தினகரனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை -அமமுகவிலிருந்து உங்களை நீக்க என்ன காரணம்?
அந்தக் கட்சியில் இணைந்த நாள் முதல் ரத்தம் சிந்தி உழைத்த பணத்தை செலவழித்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். அதை அங்கிருக்கும் ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் என்னை அந்த கட்சியிலிருந்து வெளியேற்ற சதி செய்து நீக்கினார்.

4) நீங்கள் ஏன் ஒரு தனிக்கட்சி தொடங்கி இருக்கக் கூடாது?
நான் அரசியலுக்கு பிழைப்பு நடத்த வரவில்லை. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும் படித்த கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும் தான் வந்திருக்கிறேன்.என் சுய லாபத்திற்காக இளைஞர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை.
5) அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைய காரணம் என்ன?
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை முன்னுக்கு பின் முரணாக பேசாமல் எப்போதும் ஒரே மாதிரியாக பேசக்கூடியவர். சொல்லும் செயலும் அவரிடம் ஒன்றாக இருக்கும். எம்.ஜி.ஆரின் கருணை உள்ளமும், அம்மாவின் ஆளுமையும் எனக்கு பிடிக்கும். அதே போல் இருவரும் கலந்த கலவையாக எடப்பாடிபழனிச்சாமியை பார்த்து வியப்புற்றேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இரவு தூங்கி எழுந்திருப்போமா மாட்டோமா என்ற தெரியாத வாழ்க்கையில் இருக்கும் வரை ஏழைகளுக்காக உழைக்க வேண்டும் என்றார். இந்த வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது.
6) திமுக ஆட்சியை பற்றிய உங்கள் பார்வை என்ன?
சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். இன்று வரை ரத்து செய்யப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
மின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவை வழங்கிய அரசு ஊழியர்கள் இப்போது ஆட்சி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications