வாத்தியார்களுக்கு ரூ.36000 சம்பளம், கரும்பு விலை ரூ.2300.. முதல்வரை பார்த்து முறையிட்ட அய்யாகண்ணு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சென்னையில், விவசாயிகள் தலைவர் அய்யாகண்ணு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு நிருபர்களிடம் அய்யாகண்ணு தெரிவித்ததாவது: கரும்பு விலை ரூ.90 என்று இருந்த காலகட்டத்தில், வாத்தியார்களுக்கும் ரூ.90தான் சம்பளம். இப்போது, கரும்பு ரூ.2300 என்ற விலையில் (டன் ஒன்றுக்கு) விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வாத்தியார்கள் சம்பளம் ரூ.36 ஆயிரம் ஆகும். இதிலும் கரும்பு ஆலைகள் உடனடியாக பணததை தராமல் இழுத்தடித்து வருகின்றன. உடனடியாக அதை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தேன்.
நிலுவைத் தொகையை வாங்கித் தருகிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைகள், நிலங்களை ஏலத்தில்விடுகிறார்கள். அதை தடுக்க கோரினேன்.
கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடனை மாநில அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் அனைத்து வகை விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அனைத்து விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்ய கோரி நீதிமன்றத்தை அணுகினேன். எனவே ரூ.2000 கோடி விவசாய கடனை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதை எதிர்த்து மாநில அரசு அப்பீல் போகக்கூடாது என கோரினேன்.
எங்கள் கோரிக்கைகள் நிலுவையிலுள்ள நிலையில், வரும் 21ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதா அல்லது, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவதா என்பது குறித்து டெல்லியில் ஆலோசிப்போம். 18ம் தேதி நான் விவவசாய பிரதிநிதிகளுடன் டெல்லி செல்ல உள்ளேன். இவ்வாறு அய்யாகண்ணு தெரிவித்தார்.