தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உட்பட 19 பேருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு !
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உட்பட 19 பேரின் ஜாமின் மனுவை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னையில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்தபோது, அரசியல் ரீதியாக கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக பதிலளிக்காமல் கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து தூ என்று துப்பி அநாகரீகமாக நடந்து கொண்டார் விஜயகாந்த். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த 31ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து செய்தியாளர்கள் கூட்டமாக வீட்டை நோக்கி சென்றனர்.
அப்போது அங்கு கூடிய எம்எல்ஏ பார்த்தசாரதி தலைமையிலான தேமுதிகவினர் பத்திரிகையாளர்கள் மீது சரமாரியாக கல்வீசித் தாக்கினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கல்வீசி தாக்குதல் நடத்திய எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் ஜாமின் கேட்டு சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தலைமை மாஜிஸ்திரேட் கணேசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் 19 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.